ரேசன் கார்டை தொலைத்தவர்களுக்கு ஆகஸ்டு 15 முதல் மாற்று கார்டுகள் வழங்கப்படும் என உணவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் கார்டை பதிவு செய்து அதன் அடிப்படையில் கையடக்க வடிவில் ‘ஸ்மார்ட்’ ரேசன் கார்டு குடும்பம் தோறும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டில் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்த பிறகு இ-–சேவை மையங்களில் 30 ரூபாய் கட்டணத்தில் மாற்று ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டு வந்தது. ரேசன் கார்டை தொலைத்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இ -சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் 2018 முதல் மாற்று கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதனால் ரேசன் கார்டை தொலைத்தவர்கள், மாற்று கார்டு இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டனர். ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் மாற்று கார்டு வழங்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைத்து மாவட்ட உணவு பொருள் வழங்கல், அலுவலகங்களிலும் ‘ஸ்மார்ட் கார்டை’ அச்சிட்டு தரும் மிஷினை வாங்கி கொடுத்து மாற்று கார்டுகளை வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக டெண்டர் விடப்பட்டு புது மிஷின்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்களுக்குள் அனைத்து உதவி கமிஷனர் (உணவு பொருள் வழங்கல் அலுவலகம்) அலுவலகங்களுக்கும் இந்த மிஷின்கள் வழங்கப்பட்டுவிடும். ரேசன் கார்டை தொலைத்தவர்கள் அங்கு சென்று மாற்று கார்டு வாங்கிக் கொள்ளலாம். ஆகஸ்டு 15 முதல் மாற்று கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மாற்று கார்டை பெறுவதற்கு பொது வினியோக திட்ட இணையதளத்தில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு இணைய தளம் மூலம் ரேசன் கார்டு தொலைத்ததற்காக போலீஸ் நிலையத்தில் புகார் செய்து ஒப்புகை சீட்டு பெற வேண்டும். இந்த ஆவணங்களை அடிப்படையாக கொண்டு மாற்று ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Post a Comment:
Post a Comment